அனுபவங்கள்...

ஒவ்வொரு செயலும் ஒரு புதிய அனுபவமே...

Name:
Location: Munich, Bayern, Germany

Wednesday, March 22, 2006

எல்லைகள்...


என் முந்தைய பதிவிற்கும் இந்த பதிவிற்குமான இடைவெளி தவிர்க்கமுடியாமல் ஏற்ப்பட்டு விட்டது. நேரமின்மை என்று சொல்லி தப்பிக்க விரும்பவில்லை என்றாலும் அதுவும் ஒரு காரணமே... இனி வரும் பதிவுகளில் அதிக இடைவெளி ஏற்படாமல் பார்த்துக்கொள்கிறேன்.

சரி விசயத்துக்கு வருகிறேன். சென்றவாரம் நண்பர்களுடன் அருகில் இருந்த பிரைசாக்(Breisach) என்ற கிராமத்துக்கு சென்று வந்தேன். அதன் சிறப்பு அது ஜெர்மனி, பிரான்சு எல்லையில் அமைந்துள்ளது என்பதே. எத்தனையோ தடவை இதற்கு முன்னால் அங்கே நான் சென்றிருந்தாலும் இந்தமுறை சென்ற பொழுது வித்யசமான எண்ணம் தோன்றியது.

என்ன தெரியுமா... இந்த இரு நாடுகளின் எல்லையை இணைக்கிறது ஒரு ஆறு. ரைன்(Rhein) என்ற வரலாற்று சிறப்புமிக்க இந்த ஆறு கிட்டதட்ட ஏழு நாடுகளை!!!(கவனிக்கவும்) தாண்டி ஓடுகிறது. அதன் படம் தான் நீங்கள் மேலே பார்ப்பது. அந்த ஆற்றின் மேல் உள்ள பாலம் வழியாகத்தான் போக்குவரத்து நடந்து கொண்டிருக்கிறது. சுற்றுலா பயணிகள் மட்டும் அல்லாமல் இரு கிராம மக்களும் வார இறுதியில் ஆற்றின் கரையோரம் தங்கள் பொழுதைக் கழிப்பதை பார்க்கும் போது.... நம்ம ஊரில் ஆறு இருந்தும் அதில் தண்ணீர் இருந்தும்,தண்ணீர் தர மறுக்கும் இதயம் காய்ந்து போன வரட்டு அரசியல் வாதிகளை நினைத்தால் உள்ளம் பதறுகிறது. இங்கே பல நாடுகளைத் தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது ஒரு ஆறு. அங்கே நாட்டுகுள்ளேயே ஆற்றுக்காக ஓடிக்கொண்டிருக்கிறது இரத்த ஆறு!!!


ஒரே நாட்டுக்குள், ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்திற்கே தன்போக்கில் போகும் ஆற்றை அணை போட்டு தடுத்து வைத்திருக்கிறோமே!!! எவ்வளவு பெரிய தவறு செய்து கொண்டிருக்கிறோம்... எவ்வளவு பேர் உயிரை பறித்திருக்கிறோம். எல்லையில்லாமல் ஓடிக்கொண்டிருந்த ஆற்றை அணை போட்டு அரசியல் சாயம் பூசி ஆதாயம் பார்த்துக் கொண்டிருப்பது அரசியல்வாதிகள் மட்டுமே. குடிப்பதற்கு பிஸ்லரியும் சாப்பிடுவதற்கு பாசுமதியும் கிடைத்துக் கொண்டிருக்கும் வரை இவர்களின் கொட்டம் அடங்காது...

நாடு முழுவதும் உள்ள ஆறுகளை இணைக்கிறோம் என்ற பேச்சு(க்கான) வார்தை எப்போது செயல்வடிவாகுமோ தெரியவில்லை!!! ஆறுகளை இணைப்பது ஒரு பக்கம் இருக்கட்டும்... அவற்றுக்கு செயற்க்கையாக பாதை போட்டு இணைப்பதற்கு முன்னால் தானே பாதை போட்டுக் கொண்ட ஆறுகளை அணை போட்டு தடுக்காமல் இருப்பது நல்லது.

அரசியல்வாதிகள் சுற்றுலா போகிறேன் பேர்வழி என்று வந்துவிட்டு இடங்களை சுற்றிபார்த்துவிட்டு போகிறார்களே ஒழிய இந்த மாதிரி விசயங்களை ஏனோ கவனிப்பதில்லை!!!

வைரமுத்து தன் வைரவரிகளில் சொன்னமாதிரி....

பனிக்குடம் உடைத்து பிறக்கிறோம்...

நீர்க்குடம் உடைத்து முடிக்கிறோம்...

ஆனால் இந்த இரண்டுக்கும் இடையில் அடுத்தவர் மண்டையை உடைக்கிறோம்...

இயற்கை மட்டுமே இந்த அராஜகத்திற்கு பதில் சொல்லமுடியும்... அளவில்லா மழை பொழிந்து அணை நிரம்பிரம்பினால் மட்டுமே இங்கே தண்ணீர் கிடைக்கிறது....

நல்லவேளை பாரதி இன்று இல்லை....

இருந்திருந்தால் அவர் இப்படித்தான் பாடியிருப்பார்....

என்று தணியும் எங்கள் காவிரி தாகம்....!!!
என்று மடியும் எங்கள் உழவரின் உயிர் தியாகம்!!!


அன்புடன்,
மனசு...

எல்லையில்லா வானத்தில் கூட எல்லை போட்டவன் மனிதன்.... பூமியில் இருக்கும் இந்த ஆறுகள் எம்மாத்திரம்...???

Rhein-ன் சில புகைப்படங்கள்

Saturday, March 11, 2006

நினைவலைகள்...
















சில நேரங்களில், மனசு எதுவுமே காரணங்கள் இல்லாமல் அடம்பிடிக்கும். ஏதேதோ சொன்னாலும் சமாதானமாகாமல் நம்முடம் சண்டை போடும். ஒரு சில நாட்களுக்கு முன்னால் என் நண்பனிடம் பேசிக் கொண்டிருந்தபோது அவன் சொன்னது இதுதான்,"டேய் என்னவோ தெரியலடா மனசு ரெம்ப பாரமா இருக்குடா... என்னவோ தெரியல..."

சில நேரங்களில் நமக்கே நாம் உதவி செய்யமுடியாத நிலையில், மனம் தன்னந்தனியாக உணரும்...

சில நேரங்களில் ஏதாவது ஒரு நிகழ்ச்சி நடக்கும் நேரத்தில் அது சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் ஞாபகம் வரும்...

இன்றைக்கு நான் காலையில் பிரட் பஜ்ஜி சாப்பிடும் போது நான் என் நண்பர்களுடன் விடுதியில் நாங்கள் சாப்பிட்டது ஞாபகம் வந்தது. நான்கு வருடங்களுக்கு முன்... ஒவ்வொரு சனிக்கிழமையும் எங்கள் விடுதியில் பிரட் பஜ்ஜிதான் போடுவார்கள். தக்காளி சாசும் சட்னியுமாக ஒரு பிடி பிடிப்போம். நானும் என் நண்பன் குப்புவும்(செல்லமாக நான் அப்படி கூப்பிடுவேன், முழுப் பெயர் குப்புசாமி) குளித்துவிட்டுதான் சாப்பிடுவோம். ஆனால் ஒருசிலருக்கு குளிக்காமல் சாப்பிட்டால்தான் ருசிக்குமோ என்னவோ, சனி ஞாயிரு விடுமுறை விட்டுவிடுவார்கள்... ஆனால் இரவுக்குளியல் நடக்கும். சாப்பிட்டுவிட்டு காபி டம்ளருடன் B மெஸ் முன்னால் ஒரு அரை மணி நேரம் "பொங்கல்" (அரட்டைக்கு நாங்கள் வைத்த பெயர்) வைக்கவில்லை என்றால் அன்றைக்கு பொழுதே போகாது. சாப்பிட்டுவிட்டு ஆக்டகன்(Octagen) போறேன் பேர்வழி என்று போய் உட்கார்ந்தால் மணி 12 அடிக்கும் முன்பே மெஸ்ஸில் ஆஜர் ஆகிவிடுவோம். மதியம் சப்பாத்தியும் சென்னா மசாலா சாதம் ரசம் என்று தூள் பறக்கும். வயிரு முட்ட சாப்பிட்டு அப்படியே அறைக்கு போய் ஜன்னல் கதவு எல்லாம் அடைத்துவிட்டு கொஞ்சம் கூட வெளிச்சம் வராமல் அடைத்துவிட்டு தூங்க ஆரம்பித்தோம் என்றால் சாயங்காலம் வரை சக்கை தூக்கம் போடுவோம்... சாயங்காலம் வடை காபி அப்படியே அரட்டை... கல்லூரியை சுற்றி வந்தால் மருபடியும் 7.30 க்கு சாப்பாடு... அட அட என்ன வாழ்க்கைடா அது... கல்லூரி வாழ்க்கை என்பது திரும்பக் கிடைக்காத சொர்க்கம்... யாரைப்பற்றியும் கவலைப்படாமல் நண்பர்களின் சுக துக்கங்களில் தோள் கொடுத்து அரட்டை அடித்து... தூங்காமல் விடிய விடிய விஜயிலும், ஜெயாவிலும் "மெலடி மெட்டுக்கள்" பார்க்கவில்லை என்றால் அன்றைக்கு தூக்கமே வராது...

இப்போது என்னப்பா எப்படியிருக்க என்பதோடும் குசல விசாரிப்புகளோடும் ஓடுகிறது வாழ்க்கை ஓட்டம்... எங்கே போய் நிற்குமோ...?

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இந்த மாதிரி நிகழ்வுகள் இருக்கும்...

நினைத்துப்பாக்கும் போது சுகத்தோடு கொஞ்சம் சோகமும் வந்து மனசுக்குள் அப்பிப் கொள்ளும்... பட பட என்று அடித்துக்கொள்ளும்... ஆனால் அந்த சுகத்தையும் சோகத்தையும் பகிர்ந்து கொள்ள அதே நண்பர்கள் பக்கத்தில் இருந்தால்...

சேரன் படத்தில் சொன்ன மாதிரி....

ஒருமுறைதான் ஒருமுறைதான்....
ஒரு சில மகிழ்ச்சிகள் ஒருமுறைதான்...

அன்புடன்,
மனசு...

Sunday, March 05, 2006

தண்ணீர் தண்ணீர்.....





இதை நான் எழுத காரணம்.., நீரின்றி அமையாது உலகு!!! என்று வள்ளுவன் சொன்னது. சற்று நேரத்துக்கு முன் தொலைக்காட்சியில் கண்ட காட்சி, அதை நிஜம் என்று புரியவைத்ததால்தான். சில நாட்களுக்கு முன் என் நண்பன் எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தான். அதிலும் இன்று நான் தொலைக்காட்சியில் பார்த்த காட்சியிலும் அதிக வித்யாசம் இல்லை.

தண்ணீர்!!! ஆம் தொல்லைக்காட்சியில் நான் பார்த்தது... கென்யா (KENYA) வில் தண்ணீர் இன்றி இறந்துபோகும் பிஞ்சு குழந்தைகளை. பூமியின் தண்ணீர் வற்றிப்போய் பாலைவனம் போல் காணப்படுகிறது மக்கள் வாழும் பகுதி. உணவும் தண்ணீரும் இல்லாத நிலையில் மாடுகளும், பாலைவனக் கப்பல் என்று சொல்லப்படும் ஒட்டகங்களும் மடிந்து போய் கிடக்கின்றன. கொடுமையான காட்சி.

தொண்டு நிறுவனமான யூ.என் உணவு நிறுவனம் தற்போது அவர்களுக்கு உணவும் நீரும் வழங்கி வருகிறது. அதுவும் வரும் புதன் கிழமை வரைதான் வரும் என்று தகவல்.

இவ்வளவு விளைவுகளும் தண்ணீரால். வள்ளுவன் வாக்கு நிஜம். தயவு செய்து தண்ணீரை முடிந்த மட்டும் வீணாக்காதீர்கள். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் இதை சொல்லுங்கள். ஏனென்றால், கென்யாவின் நிலை மற்ற இடங்களுக்கு வருவதற்கு வெகு நாட்கள் ஆகாது... !!!

அன்புடன்,
மனசு...